மலடியின் தாலாட்டு
வாவாஎன் கண்மணியே
வந்தாடும் கட்டழகே !
வாராது வந்துநின்ற
வடிவழகுப் பெட்டகமே !
உந்தை எனக்களித்த
மணவாழ்வுப் பரிசான
சந்தனப் பேழையடா
சதிராடி வந்திடடா!
பொக்கைவாய்ச் சிரிப்பினிலே
பறிகொடுத்த என்னுள்ளம்
தக்கையாகிப் பறக்குதடா
தாவித்தாவிக் குதிக்குதடா !
மலடி மலடிஎன
இவ்வுலகம் எனையழைக்க
வலம்புரிச் சங்கென நீ
வந்துவிட்டாய் கலிதீர்க்க!
உன்னைப் பிரிந்தாலோ
உறங்காது என்னுள்ளம்
கண்ணிமையை மூடாது
காத்திடுவேன் வா வாவா !


No comments:
Post a Comment