Wednesday, 8 February 2012

மரணம்

மரணம் 

உயிர் 
தன் உடலென்னும் கூட்டைவிட்டுக்
கிளம்பிச் செல்லும் 
திரும்பிவராத்  தீர்த்த யாத்திரை! 

வாழ்க்கை  என்னும்  வேடந்தாங்கல்  விட்டு 
உயிர்ப்பறவை தேடியோடும் 
கண்காணா தூரதேசம்!

அரசனையும் 
ஆண்டியையும் 
சமமாக்கும் 
காலதேவனின் கடைசி அஸ்திரம்!

கடனைத் திருப்பித்தரமுடியா 
கடன்காரர்கள் எடுக்கும்
கடைசி முடிவு ! 

காதல் தோல்வி கண்ட  
கன்னியரும் காளையரும் 
தேடியோடும் 
கடைசிப் புகலிடம்!

கனவுகளேதும் 
நடுவே வந்து 
கலங்க வைக்கா 
கடைசி உறக்கம் !

வாழ்க்கை என்னும் 
முழுநீள நாவலின் 
முற்றுப் புள்ளி! 

மலடியின் தாலாட்டு


மலடியின் தாலாட்டு 

வாவாஎன் கண்மணியே 
      வந்தாடும் கட்டழகே !
வாராது வந்துநின்ற 
      வடிவழகுப் பெட்டகமே !

உந்தை எனக்களித்த 
       மணவாழ்வுப் பரிசான 
சந்தனப் பேழையடா
       சதிராடி வந்திடடா!

பொக்கைவாய்ச் சிரிப்பினிலே
       பறிகொடுத்த என்னுள்ளம் 
தக்கையாகிப் பறக்குதடா 
       தாவித்தாவிக் குதிக்குதடா !

மலடி மலடிஎன 
       இவ்வுலகம் எனையழைக்க
வலம்புரிச் சங்கென நீ 
        வந்துவிட்டாய் கலிதீர்க்க!

உன்னைப் பிரிந்தாலோ 
        உறங்காது என்னுள்ளம் 
கண்ணிமையை மூடாது 
        காத்திடுவேன் வா வாவா !